Suresh - Knowledge Sharing
Follow Suresh on Twitter
 
லட்சியத்தை அடைய புத்தகமே வழி : அப்துல் கலாம்

To gain a aim, read books: Abdul Kalam


வா
ழ்வில் லட்சியம் வேண்டும். லட்சியத்தை அடையக்கூடிய அறிவு, புத்தகமே என, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குறிப்பிட்டார்.

மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் நடந்த புத்தக திருவிழாவின் நிறைவு விழா நேற்று  நடந்தது. இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அப்போது அவர் ஆற்றிய உரையில்,

“ஈரோடு மக்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்; என்னுடன் சேர்ந்து நீங்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். இது பெற்றோர் சொல்ல வேண்டிய உறுதிமொழி.

“என் வீட்டில் பூஜை அறை அல்லது பிரார்த்தனை இடத்துக்கு அருகில் 20 நல்ல புத்தகத்தை வைத்து சிறு நூலகத்தை உருவாக்குவேன். என் வளர்ந்த மகன் அல்லது மகள் 20 நூல் கொண்ட நூலகத்தை 200 புத்தகம் கொண்ட நூலகமாக மாற்ற உறுதியாக இருப்பார். என் பேரன், பேத்திகள் 200 புத்தகத்தை 2,000 புத்தகம் கொண்ட நூலகமாக மாற்றுவார். எங்கள் குடும்பம் நூலகத்தை தினமும் பயன்படுத்தி, இன்று முதல் நல்ல புத்தகங்கள் படிக்க ஆளாக்குவேன். எங்கள் வீட்டு நூலகம் தான் பரம்பரை சொத்து; அறிவு களஞ்சியம்; தமிழகத்தின் அறிவு புரட்சிக்கு ஆதாரமாக அது அமையும்” என்று அப்துல்கலாம் கூறக்கூற கூடியிருந்தமக்களும்உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்..

உறுதிமொழியைத் தொடர்ந்து  அப்துல் கலாம் பேசுகையில்,

“நல்ல புத்தகங்கள் கற்பனை சக்தியை வளர்க்கும். கற்பனை சக்தி சிந்தனையை வளர்க்கும். சிந்தனை அறிவு நம்மை மேம்படுத்த உதவும். மூத்த பத்திரிகையாளர்கள் அதிகளவு புத்தகங்களை படைக்க வேண்டும். இளைஞர்களை ஊக்குவிக்க அவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். நல்வழிப்படுத்த ஆங்கிலம், தமிழ் பதிப்பகங்கள் முன்வர வேண்டும்.

நான் சிறுவனாக இருந்த போது ராமேஸ்வரத்தில் தொடர்ந்து படிக்க முடியுமா என்ற சந்தேகம் வந்தது. பின்னர் மேல்படிப்புக்கு செல்ல முடியுமா என நினைத்தேன். ராமநாதபுரத்தில் ஒன்பதாவது முடித்து, பத்தாவது சேர்ந்ததும் எனக்கு அருமையான பொக்கிஷம் கிடைத்தது. அதுதான் எனது ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யர். எனது வாழ்க்கையில் புத்தகங்கள்தான் சிறந்த வழிகாட்டியாக அமைந்தன.எனது வாழ்க்கையை மூன்று புத்தகங்கள்தான் வழிநடத்தி சென்றன. 1954ம் ஆண்டு சென்னை மூர் மார்க்கெட்டில் 20 ரூபாய்க்கு வாங்கிய புத்தகத்தை நான் இன்றும் வைத்துள்ளேன்.

மனநிலையை சரிப்படுத்துவது புத்தகமே.திருவள்ளுவர் தந்த திருக்குறள், நாகரிகம் கற்று கொடுத்தது. இன்றும், நாளையும், என்றும் வாழ்க்கையை நெறிமுறைப்படுத்தும் நூலாக அது அமைந்துள்ளது. வாழ்க்கையின் வழிகாட்டியாக உள்ளது. அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவி. இதுபோன்ற தகவல்களை தந்தது திருக்குறள்.

“எம்ப்யர் இன் மைண்ட்’ என்ற புத்தகத்தில் வாழ்க்கையை செம்மைப்படுத்தும் தகவல்கள் ஏராளமாக உள்ளன. ஒவ்வொரு பெற்றோரும் தனது மகன், மகள் ஆகியோர் வரலாற்று சிறப்புமிக்கவராகவும், விஞ்ஞானியாகவும், டாக்டராகவும், பொறியாளராகவும் வர வேண்டும் என கனவு காண்பர்.நல்ல புத்தகங்கள் மட்டுமே எப்போதும் உற்ற நண்பனாக இருக்கும். என் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சென்னை எம்.ஐ.டி., கல்லூரியில் 1955-56ல் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, விடுதியில் இருந்த மாணவர்கள் விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டனர். நான் மட்டும் தனியாக விடுதியில் இருந்தேன். அப்போது எனது உறவினர் அகமது ஜலாலீன் என்பவர் ஃபோன் செய்து; ‘ராமேஸ்வரத்தை புயல் தாக்கிவிட்டது’ எனக் கூறினார். உடனே ஊருக்கு செல்ல எனது மனம் துடித்தது. ஆனால், கையில் பணம் இல்லை. ‘என்ன செய்வது’ என யோசித்தேன்.பேராசிரியர் லட்சுமணசாமி முதலியார் எனக்கு பரிசாக கொடுத்த 400 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் என் கையில் இருந்தது. அதை மூர்மார்க்கெட்டில் விற்று விட்டு ராமேஸ்வரம் சென்று குடும்பதை பார்த்து விட வேண்டும் என நினைத்தேன்.அதன்படி, மூர்மார்க்கெட் சென்று, அங்கு குடுமி வைத்த பிராமணர் ஒருவரிடம் புத்தகத்தை கொடுத்து பணம் கேட்டேன்.

உடனே அவர், ‘நீங்கள் அவசரமாக செல்ல இருப்பதால் பணம் கேட்பது போல் தெரிகிறது. இந்த புத்தகம் இங்கே இருக்கட்டும்; உங்களுக்கு நான் பணம் தருகிறேன்’ எனக்கூறி 60 ரூபாய் கொடுத்தார்.அந்த பணத்தின் மூலம் நான் ராமேஸ்வரம் வந்தேன். பெற்றோரை பார்த்து விட்டு பழைய புத்தகக்கடைக்கு வந்தேன். ‘புத்தகத்தை யாரும் எடுத்து சென்று விடக்கூடாது’ என மனது அலை பாய்ந்தது. அங்கு வந்ததும் அந்த பிராமணர் புத்தகத்தை கொடுத்தார். நான் அவருக்கு 60 ரூபாயை கொடுத்தேன். ‘புத்தகத்தின் மீது நீ வைத்திருக்கும் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். நீ நன்றாக வர வேண்டும்’ என வாழ்த்தினார்.புத்தகங்கள் வாழ்க்கையில் இன்றியமையாதவை. சில சமயம் பணம் வாங்கவும் உதவி செய்கிறது.அறிவின் இலக்கணம் என்பது என்ன? அறிவு என்பது கற்பனை சக்தி, ப்ளஸ் மனத்தூய்மை, ப்ளஸ் உறுதி.கற்றல்; கற்பனை சக்தியை வளர்க்கிறது. கற்பனை சக்தி; சிந்தனையை வளர்க்கிறது.

சிந்தனை; அறிவை வளர்க்கிறது. அறிவு மகானாக்குகிறது. ஒவ்வொருவர் உள்ளத்திலும் மனத்தூய்மை வேண்டும். மனத்தூய்மையை மூன்று பேரிடம் பெற முடியும். பெற்றோர், ஆரம்பப்பள்ளி ஆசிரியர், உன்னிடம் உள்ள உறுதி. இவை மூன்றும்தான் மனத்தூய்மையின் அடையாளம்.

‘எனக்கென்று புது பாதையை உருவாக்கி அதில் பயணம் செய்வேன்; முடியாது என்று சொல்வதை முடியும் என நினைக்க வேண்டும். என் கடின உழைப்பாலும், உறுதியாலும் தோல்வியை தோல்வியடையச் செய்து வெற்றியை உண்டாக்குவேன்’ என இளைஞர்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியா 2020ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக வேண்டும் என்றால் 54 கோடி இளைஞர்கள் கையில்தான் உள்ளது. இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் முன் வர வேண்டும். தடைக்கற்களை தாண்டி வர வேண்டும். இந்தியா வளர்ந்த நாடாக வர வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

அது உங்களின் குறிக்கோளாகவும் இருக்க வேண்டும்.இதற்கு நல்ல வேலை, நல்ல கல்வி, நல்ல பயிற்சி தேவை. 2020ல் எப்படி வளமான நாடாகும் என நான் எழுதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளேன். அதாவது, சிந்தனை, செயல் ஒன்றுபட்டால் லட்சியம் நிறைவேறும். சுத்தமான தண்ணீர், அனைவருக்கும் எரிசக்தி கிடைக்கும் அளவுக்கு இந்தியாவை மாற்ற வேண்டும். அனைவருக்கும் கல்வி கிடைக்க பாடுபட வேண்டும். தரமான மருத்துவ வசதி கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். ஊழல் இல்லாத நாடாக மாற்ற வேண்டும். பாதுகாப்பான, சுகாதாரமான பீடு நடைபோடும் நாடாக மாற்ற இளைஞர்கள் பாடுபட வேண்டும். 54 கோடி இளைஞர்கள்தான் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி.கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்க முன்வர வேண்டும்.

வருங்காலத்தை பற்றி பயப்படாமல் வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்.பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் தேவை. பூமி சூரியனை வலம் வர ஓராண்டாகிறது. நிமிடம், வினாடி, வாரம், மாதங்கள் பறக்கும். நம்மால் இதை கட்டுப்படுத்த முடியாது. பறக்கும் நாட்களை வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பயனடைய செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.விண்ணில் இருக்கும் விண்மீனை பார்க்கிறேன்; நாம் அதை அடைய வேண்டும் என மனதில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு செய்யும் பட்சத்தில் நிச்சயம் வந்தடையும். வாழ்வில் லட்சியம் இருக்க வேண்டும். லட்சியத்தை அடையக்கூடிய அறிவு புத்தகமே. அனைவரும் நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும்” என்றார்.

 
மன ஒருமைப்பாடு

மனதை ஒரு முகப்படுத்த கற்றவன் ‘மகான்’ ஆவான். இதனை சுவாமி விவேகானந்தர் இவ்வாறு கூறுகிறார்.

  • கல்வியின் அடிப்படையான இலட்சியமே மனதை ஒருமுகப்படுத்துவதுதான். மனதை ஒரு முகப்படுத்துகிற அளவுக்கு அறிவு வளர்ச்சியும் அதிகமாகும்.
  • நான் மறுபடியும் கல்வி கற்பதாக இருந்தால் வெறும் புள்ளி விவரங்களை படிக்கமாட்டேன். முதலில் மனத்தை ஒரு முகப்படுத்தும் ஆற்றலையம், நல்ல பண்பாட்டையும் வளர்த்துக் கொள்வேன். அதன் பிறகு பண்படுத்தப்பட்ட அந்தக் கருவியைக் கொண்டு நினைத்த நேரத்தில் உண்மைகளை சேகரித்துக் கொள்வேன்.
மனஒருமைப்பாடு பற்றி உலக வரலாறு கூறுவது:

  • ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி இவ்வாறு கூறுகிறார் – ஒரு நாள் நள்ளிரவு நேரம். அழகிய மனைவி. இளம் வயதினாள். அவள் தூங்கவில்லை. கவிஞனும் தூங்கவில்லை. எழுதுகோல் அவன் கையில் இருக்கிறது. அவன் பார்வை எங்கோ எட்டாத தொலைவில் எதையோ துழாவிக் கொண்டிருக்கிறது. படுத்துக் கொண்டு இருக்கும் மனைவியின் கண்களோ கணவன் எப்போது எழுந்து வருவார் என்று ஏங்குகின்றன.
அவன் எழுதுகிறான். இவளோ ஏங்குகிறாள். எழுந்து அவனை நெருங்கிச் செல்வதற்கு அடியெடுத்து வைத்தாள். மெதுவாக, மிக மெதுவாகத்தான் அவள் வந்தாள். ஆனாலும் கவிஞன் சொன்னான்…

‘பெண்ணே? மெதுவாக நட – என் கனவுகளைக் கலைக்காதே என்று…’. ஆம், நுண்ணிய மென் பொருளைத் தேடி பயணம் போகும் கவிஞனின் இதயம் மனைவியின் பூப்பாதம் எழுப்பும் மெத்தென்ற ஒலியையும் சகிக்க மறுக்கிறது.

  • வில் வித்தையில் வித்தகர் அர்ச்சுனனின் மன ஒருமைப்பாடு. மரத்தின் உச்சியிலிருக்கும் பறவையை ஒரே அம்பில் வீழ்த்த வேண்டும் என்பது போட்டியின் நிபந்தனை. வில் வளைந்து நாணேற்றிக் குறி பார்த்த அர்ச்சுனனுக்குப் பறவையின் கழுத்து மட்டுமே தெரிந்தது. விட்டார் அம்மை, விழுந்தது பறவை. வில்வித்தையில் வெற்றி வீரனானான். கழுத்து மட்டுமே எப்படித் தெரிந்தது? மற்ற சிந்தனைகள் எதுவும் அவன் உள்ளத்தில் புகவில்லை – புகுமாறு விடவில்லை. எனவே அவன் கண்கள் பார்க்க வேண்டியதை மட்டுமே பார்த்தன. ஆனால், அர்ச்சுனனைத் தவிர மற்றவர்களது கண்களோ மரத்தின் கிளைகளையும் இலைகளையும் அவற்றோடு பறவையையும் பார்த்தன.
  • நெப்போலியன் மன ஒருமைப்பாடு – நெப்போலியன் தனது உள்ளத்தைப் பல அறைகள் கொண்ட ஒரு கூண்டிற்கு ஒப்பிடுகிறார். ஓர் அறையினைத் திறந்து வைத்திருக்கும் போது, அதாவது ஒரு பொருளைப் பற்றிச் சிந்திக்கும் போது மற்ற எல்ல அறைகளையும் அடைத்து வைத்து விடுவாராம்.
 
விமர்சிக்கும் உலகம் இது

பட்டினத்தார் எத்தனை பெரிய துறவி? கோடிக்கணக்கான சொத்தை அப்படியே விட்டுவிட்டுக் கோவணத்துடன் வெளியேறிய கடுந்துறவி. சோற்றாசை கூட இல்லாத சந்யாஸி. கையில் ஓடு வைத்திருந்த பத்திரிகிரியாரைத் சொத்து வைத்திருக்கும் குடும்பஸ்தன் என்று கிண்டலடித்த அப்பழுக்கற்ற துறவி. அவரையே உலகம் என்ன பாடுபடுத்தியது தெரியுமா?

நடந்த களைப்பால் வயலில் படுத்திருந்தார் பட்டினத்தார். அறுவடை நடந்திருந்த வயல் அது. குச்சி குச்சியாய்ப் பூமியில் இருந்து கிளம்பி அறுபடாதிருந்த வைக்கோல் அவர் உடம்பில் குத்திக் கொண்டிருந்தது. அதைச் சட்டை செய்யாமல் (சட்டை இல்லாமல்) படுத்துக் கிடந்தார். இருக்கும் போதே இறந்து போன மாதிரி இருந்தார்.

அந்த வழியாகப் போன இரண்டு பெண்கள் வரப்பு வழியாக நடந்து போக முடியாதபடி பட்டினத்தார் வரப்பு மீது தலைவைத்துப் படுத்திருந்தார். ஒரு பெண்மணி, “யாரோ மகானா!” என்று அவரை வணங்கி வரப்பிலிருந்து இறங்கி நடந்தார். மற்றொரு பெண்மணியோ, “ஆமாம்… ஆமாம்… இவரு பெரிய சாமியாராக்கும்… தலையணை வைச்சுத் தூங்கறான் பாரு… ஆசை பிடிச்சவன்” என்று கடுஞ்சொல் வீசினார். அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்த பட்டினத்தார், “ஆஹா… நமக்கு இந்த அறிவு இது நாள் வரை இல்லையே” என்று வருந்தி வரப்பிலிருந்து தலையைக் கீழே வைத்துப் படுத்தார்.

சற்று நேரத்தில் அந்த இரண்டு பெண்களும் அதே வழியாகத் திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து தலையை இறக்கிக் கீழே வைத்திருந்த பட்டினத்தாரைப் பார்த்து முதல் பெண் பரிதாபப்பட்டு, “பார்த்தாயா… நீ சொன்னதைக் கேட்டு உடனே கீழே இறங்கிப் படுத்துட்டாரூ… இப்பவாவது ஒத்துக்கோ… இவரு மகான்தானே…! என்றார். அந்த பெண்மணியோ, தனக்கே உரித்த பாணியில் “அடி போடி… இவனெல்லாம் ஒரு சாமியாரா? தன்னைப் பத்தி யார் யாரு என்ன என்ன பேசுறாங்கன்னு ஒட்டுக் கேட்கிறான்… அதைப் பத்திக் கவலைப்படறான். இவனெல்லாம் ஒரு சாமியாரா?” என்று ஒரு வெட்டு வெட்டினாள். பட்டினத்தாருக்குத் தலை சுற்றியது. 

எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை. தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்கிற வெறியுடன் விமர்சிக்கிறவர்கள் விமர்சனத்தைப் புறக்கணியுங்கள்!!!

 
ராக்ஃபெல்லர்

அமெரிக்காவில் ஒரு சாதாரண விற்பனைப் பிரதிநிதிக்கு மகனாக 1839ம் வருடம் பிறந்தார் ராக்பெல்லர். வறுமையான சூழலில் தொடர்ந்து படிக்க விரும்பமின்றி, தன் 16வது வயதில் ஒரு கமிஷன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். தொடர்ந்து இரண்டு வருடம் கடுமையாக உழைத்தும் சம்பளம் உயரவில்லை. எனவே, ஒரு நண்பருடன் சேர்ந்து தனியே கமிஷன் வியபாரம் தொடங்கினார். ஓஹோவென வியபாரம்

நடந்துகொண்டு இருந்தபோதுதான், அமெரிக்காவில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. எதிர்காலத்தில் எண்ணெய் வியபாரம்தான் பெருகும் வளர்ச்சியடையும் என துல்லியமாகக் கணித்த ராக்ஃபெல்லர், 1863ம் வருடம் அந்தத் தொழிலில் இறங்கினார். “உனக்குப் பணம் சம்பாதிப்பதற்கு ஏன் இவ்வளது ஆசை?” என்று நண்பர்கள் கேட்ட போது, “பணம் சம்பாதிப்பதைவிட, தொழிலில் முதல்வனாக இருக்கவே விரும்புகிறேன். சந்தோஷம் என்பது பணத்தில் இல்லை;  எனக்குக் கிடைக்கும் வெற்றியில் தான் இருக்கிறது!” என்றார். சொன்னது போலவே, தொழிலில் முதல்வனாக இருந்து மிக அதிகமாகப் பணம் சம்பாதித்து, 1910 முதல் 1937 வரை உலகின் பெரும் பணக்காரராகத் திகழ்ந்தார்.

முதல் 50 வருடங்களில் சம்பாதித்த பணத்தை அடுத்து வாழ்ந்த 48 வருடங்களில் நல்ல வழிகளில் செலவிடுவதில் அதிக ஆர்வம் காட்டினார். மருத்துவ ஆராய்ச்சிக்கென ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகம், மருத்துவ சேவைக்கென ராக்ஃபெல்லர் பவுண்டேசன் எனப் பல்பேறு சேவை நிறுவனங்கள் தொடங்கி அமெரிக்காவின் முன்னனேற்றத்திலும் முக்கியப் பங்கு வகித்தார்.

தான் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாகச் சம்பாதித்து வெற்றி கண்ட ராக்ஃபெல்லர், 100வயது வரை வாழ வேண்டும் என்கிற தனது ஆசை மட்டும் நிறைவேறாமல், 98 வயதில் மரணம் அடைந்தார்.

 
அசாதாரண மனிதர்கள் – II

அது ஒரு நாலு வயதுக் குழந்தை. ஆசை ஆசயாய் அந்தக் குழந்தையை அலங்காரம் செய்து பள்ளிக்கூடம் அனுப்பினாள் அம்மா. அந்தக் குழந்தைக்கு கொஞ்சம் காது மந்தம். ‘டாமி’ என்பது குழந்தையின் செல்லப் பெயர். மனம் நிறைய கனவுகளுடன் அந்தக் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிய தாயாருக்கு நெஞ்சு நிறைய சோகங்களை பரிசளித்தார் ஓர் ஆசிரியை. மூன்று மாதம் பள்ளிக்கூடம் சென்று வந்த அந்தக் குழந்தையின் சட்டைப்பையில் ஒரு காகிதத்தை திணித்து அனுப்பியிருந்தார் ஆசிரியை. “படிப்பதற்கு இலாயக்கற்ற முட்டாள் உங்கள் டாமி. இவனை இனிமேல் பள்ளிக்கு அனுப்பித் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று அதில் எழுதியிருந்தது. குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு அந்தத் தாய் சொன்னாள், “என் மகன் அறிவாளி. நானே படிக்க வைப்பேன். அறிவாளி ஆக்குவேன்” என்று ஆவேசமாக அறிவித்தாள். “படிக்கலாயக்கில்லை” என்று முத்திரை குத்தப்பட்ட அந்த பையனைப் பற்றி, அவன் கண்டுபிடிப்புகள் பற்றி இன்றைக்குக் கூடப் பிள்ளைகள் படித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த முட்டாள் டாமிதான் 1093 கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசன். பள்ளிக்கூடம் போகாத பையனைப் பற்றி பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக இன்று பாடம் நடக்கிறது போதுமா? சாதாரண மனிதர்களே அசாதாரணர்கள்.

எடிசனுடைய அறுபத்து ஏழாவது வயதில் அவருக்கு நேர்ந்த விபத்து தாங்கக்கூடியதே அல்ல. பாடுபட்டு அவர் உருவாக்கிய பல லட்சம் பொறுமான அவரது ஆய்வுக்கூடம், தொழிற்சாலை பற்றி எரிந்தது. இன்ஷீரன்ஸ் தொகையோ அதிகம் வராது. பற்றி எரியும் தொழிற்கூடத்தைப் பார்த்து எடிசன் சொன்னார். “நல்லது. என் தவறுகள் யாவும் எரிந்து போயின. என் பிழைகள் யாவும் கருகிவிட்டன. இந்த அழிவிலும் ஒரு நன்மை இருக்கிறது. கடவுளுக்கு நன்றி. இனி ஒரு புதிய தொடக்கம் உண்டு” என்றார். இந்த தீ விபத்து நடந்த மூன்றே வாரத்தில் அவர் ‘போனோகிராப்’ என்பதைக் கண்டுபிடித்தார்.

 
அடிமையாகாதே! அடிமையாக்காதே!!

ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி. அவர் தலைமையில் அமெரிக்காவில் போர் நடந்து கொண்டிருந்த சமயம். பத்துப் பதினைந்து போர் வீரர்கள் ஓர் உத்திரத்தைப் படாத பாடுபட்டு நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் குழுவின் தலைவன் குதிரையில் அமர்ந்தபடி அவர்களை அதட்டி உருட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தான். அவர்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு அந்த உத்திரத்தை நகர்த்த முடியாதபடி அதிகச் சிரமப்பட்டார்கள். வேகமாக அதட்டினான் அந்தக் குழுவின் தலைவன்.

அப்போது அங்கு குதிரையில் வந்த வீரன் ஒருவன் தலைவனைப் பார்த்து, “அவர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே… நீயும் அவர்களோடு சோர்ந்து அதை நகர்த்தக் கூடாதா?” என்று கேட்டான். குழுத்தலைவன், “நான் யார் தெரியுமா? அவர்களின் தலைவன்… அவர்களோடு சமமாக வேலை செய்ய முடியுமா?” என்று உறுமினான்.

குதிரையில் வந்தவன் இறங்கி, வீரர்களுக்கு உதவி, உத்தரத்தை நகர்த்தி அதன் இடத்தில் வைத்து விட்டுப் பிறகு தனது குதிரையில் ஏறி அமர்ந்தான். அந்தக் குழுவின் தலைவனைப் பார்த்து, “இனி இப்படிக் கடினமாக வேலை ஏதாவது இருந்தால் எனக்குச் சொல்லி அனுப்புங்கள். அவசியம் நான் வந்து உதவுகிறேன்” என்று உரக்கச் சொன்னான்.

நீ யார்? உனக்கு எப்படிச் சொல்லி அனுப்புவது? உன் இருப்பிடம் எது? என்று அலட்சியமாகக் குழுத்தலைவன் கேட்டான். “நானா… ஜார்ஜ் வாஷிங்டன். உங்களின் தலைமைத் தளபதி” என்று அழுத்தமாகக் கூறி விட்டுக் குதிரையைத் தூண்டிச் சிட்டாய் பறந்தார் ஜார்ஜ் வாஷிங்டன்.

தனியாய் இரு!

தலைவனாய் இரு!!

அடிமையாகாதே! அடிமையாக்காதே!!

 
அவமானம்

அண்மையில் கவியரசர் கண்ணதாசன் பற்றி அவரது அருமை மகள் காந்தி கண்ணதாசன் ஒரு செய்தி சொன்னார். செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார் கவியரசு கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார் கவிஞர்.

நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணாடி வரை நடந்து போக முடியாது. அதனால் கடற்கரையில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினான்கு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது. “படு…படுக்கணும்னா நாலணா கொடு” என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றிக் கலங்கிய கண்களுடன் காந்தி சிலையில் இருந்து நடந்திருக்கிறார் கண்ணதாசன்.

அவர் வளர்ந்து கவியரசாகி “சுமைதாங்கி” என்ற சொந்தப்படம் எடுக்கிறார். கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.

நள்ளிரவு படப்பிடிப்பு. ஆனால் படத்தில் இரவு ஏழு மணி மாதிரி இருக்க கடற்கரை ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும். ஏழு கார்களை நிற்க வைத்து மாறிமாறி ஒன்றன்பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள். வீட்டில் இந்தப் படத்தைப் பார்த்துச் சொல்லியருக்கிறார். “இந்தக் கார்களை கவனித்தீர்களா? இவை எல்லாமே நம்முடைய கார்கள். வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்று போலீஸ் நடக்கவிட்டது… இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது” என்றாராம்.

எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவியரசர் தம் வெற்றியை அரங்ககேற்றியிருக்கிறார். அவமானம் ஒரு மூலதனம்.

கவியரசு அவர்களின் மெய்சிலிர்க்கும் பாடல் வரிகளில் ஒரு சில…

“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை!

எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!!”

 

“போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்

தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்

ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்

எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன்; அஞ்சேன்”

 
இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த பொழுது டாக்டர். இராதாகிருஷ்ணன், ஆங்கிலேயர்களின் பாராட்டு விருந்து ஒன்றிற்கு சென்று இருந்தார். அப்போது ஓர் ஆங்கிலேயர், “ஆண்டவனுக்கு எங்கள் மாதிரி ஆங்கிலேயரிடம் தான் அன்பு அதிகம்! அவர் முயற்சி செய்து அதிக விருப்பத்தோடு எங்களைப் படைத்தார். அதனாலேதான் எங்களது உடல் இவ்வளவு வெண்மையாக இருக்கிறது!” என்று கூறினார்.

அப்போது, கூட்டத்தில் இருந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் சிரித்துக் கொண்டே இவ்வாறு பதில் கூறினார். “நண்பர்களே! ஒரு சமயம் ஆண்டவன் ரொட்டி தயாரிப்பதற்கு ஆசைப்பட்டார். உடனே அதற்கான முயற்சியில் இறங்கினார். முதல் ரொட்டியைச் சுட்டார். அது சரியாக வேகவில்லை. அதனாலே வெள்ளையாகச் சிலர் பிறந்தார்கள்! இரண்டாவதாக ஒரு ரொட்டியைச் சுட்டார். அது நிறைய நேரம் வெந்து விட்டது. அதனாலே கருப்பாகச் சிலர் பிறந்தார்கள். ஆண்டவன் இப்படி இரண்டு முறை அனுபவப்பட்டதற்கு பிறகு, மூன்றாவது முறை சரியான பக்குவத்தில் ரொட்டியைய் தயார் செய்தார். அது அரை வேக்காடகவும் போகவில்லை. கரிஞ்சும் போகவில்லை. அதன் காரணமாக இந்தியர்களாகிய நாங்கள் பிறந்தோம்”.

இதைக் கேட்டதும் கூட்டத்தில் இருந்த அனைவரும் சிரித்து விட்டார்கள். இந்நிகழ்ச்சி வேடிக்கையாக இருந்தாலும் கூட “இந்தியர்கள ஒரு பக்குவமான மானிடப் படைப்பு” என்பதை உறுதி செய்கிறது.

 
நண்பர் ஒருவர் வீட்டிற்கு போகிறோம் அல்லது வேலை விஷயமாக மற்றொருவரை சந்திக்கப் போகிறோம். அவர் நம்மை மதிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். நமது கெளரவம் பாழ்பட்டதாக புல‌ம்புகிறோம். நரம்புகள் விம்மிப் புடைக்கும் அளவுக்கு கோபப்படுகிறோம். நாம் சந்தித்த மனிதரை திட்டுகிறோம், பழிவாங்கத் துடிக்கிறோம். ஏன் இந்தக் கோபம், துடிப்பு, உணர்ச்சி வசப்படுதல்? நீங்கள் நீங்களாகவே தான் இருக்கிறீர்கள். மற்றவர் மரியாதை கொடுப்பதினாலோ அல்லது புகழ்வதினாலோ எதுவும் நடக்கப் போவது இல்லை. அது ஒரு சிறு சம்பவம் அல்லது நிகழ்ச்சி.

உதாரணமாக, தத்துவஞானி சாக்ரடீஸ் தன் நண்பருடன் நின்று உரையாடிக் கொண்டிருந்த போது சாக்ரடீஸின் மனைவி முதலில் குப்பையைய் மேல் மாடியில் இருந்து அவர் தலையில் கொட்டினார். சற்று நேரம் கழித்து ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டு வந்து அவர் தலையில் உயரே இருந்து ஊற்றினார். சாக்ரடீஸ் சமாதானமாகக் கூறினார், “முன்பு இடி இடித்தது, இப்பொழுது மழை பொழிகிறது” என்று. இந்த வெளி விஷயம் சாக்ரடீஸின் உள்ளத்தைப் பாதிக்க வில்லை. விஷயங்களில் அதற்குள்ளாக நன்மை, தீமை ஏதும் இல்லை. நாம் அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே நம் உணர்ச்சிகள் புறப்படுகின்றன.

ஜென் மதக் கதை ஒன்று, குரு தனது சீடருடன் உணவிற்காக வீடு வீடாகச் சென்று கொண்டு இருந்தார். ஒரு வீட்டில் பெண்மணி வெளியே வந்து குருவைப் பார்த்து திட்டி விட்டு சென்று விட்டார். சீடர் உடனே அந்தப் பெண்மணியைய் பார்த்து கோபப்பட்டார். உடனே குரு சீடரை அமைதியாக அழைத்துச் சென்று இப்பொழுது முதல் இந்த தட்டை நீயே வைத்துக் கொள் என்று கூறி விட்டார். அன்று இரவு சீடனை அழைத்து இப்பொழுது இந்த தட்டு யாருடையது என்று கேட்டார். சீடரின் பதில்… இது என்னுடையது என்றார். காலையில் எப்படி என்னுடையதாக இருந்த இந்த தட்டு மாலையில் நீங்கள் ஏற்றுக் கொண்டவுடன் உங்களுடையதாக மாறியதோ அதே போலத்தான் அந்த பெண்மணி திட்டிய பொழுது திட்டியது என்னையே என்று ஏற்றுக் கொள்ளாதவரை அந்த பெண்மணி கூறிய கடுஞ்சொற்கள் யாவும் அந்தப் பெண்மணியையே சாறும் என்று குரு சீடனுக்கு அறிவுரை கூறினார்.

“எல்லாம் ஒரு சொல்லை, ஒரு சம்பவத்தை, ஒரு பிரச்சனையைய் எப்படி

எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே இருக்கிறது”.

 
வெற்றியின் இரகசியம்

தாமஸ் ஆல்வா எடிசன் வேறு எந்த மனிதரைக் காட்டிலும் அதிகமான தோல்விகளைச் சந்தித்தார். அந்த அனுபவ அறிவைக் கொண்டு வேறு எந்த மனிதரைக் காட்டிலும் அவர் அதிகமாக வெற்றி பெற்றது இயற்கை. 1093 கண்டுபிடிப்புகள் அவர் பெயரில் உள்ளன.

ஞபாகமிருக்கட்டும் எடிசன் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் முயற்சி செய்த காரணத்தினால்தான் 1093 புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. கோடிக்கணக்கான டாலர்களைச் சம்பாதிக்கவும், மனித சமுதாயத்துக்கு அளவிட முடியாத தொண்டு செய்யவும் முடிந்தது. இந்தக் கண்டுபிடிப்புகளெல்லாம் கடுமையான உழைப்பின் பலன்களே தவிர, எங்கிருந்தோ வந்து குதித்த எண்ணங்களின் விளைவுகள் அல்ல!

அவர் கூறியது போல, “ஒரு மேதையின் புத்திசாலித்தனம் - ஒரு சதவிகிதம் திடீரென்று உதிக்கும் யோசனைகளிலும், 99 சதவிகிதம் வியர்வையிலும் அடங்கியிருக்கிறது”. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைப்பதன் மூலம் அதை அவர் நிரூபித்துக் காட்டினார்.

மின்சாரத்தைக் தேக்கி வைக்கும் ஸ்டோரேஜ் பாட்டரியைக் கண்டுபிடிக்கப் பத்துவருடம் உழைத்தார்! அவரும் அவரது உதவியாளர்களும் 17,000 வகைத் தாவரங்களைப் பரிசோதித்துப் பாகுபாடு செய்து பின்னர் ஒரே ஒரு மரத்திலிருந்து லேடக்ஸ் என்னும் பொருளை வடிக்கும் முறையைக் கண்டுபிடித்து வெற்றி அடைந்தார்கள்! ஒரு முறை வெற்றியடையும் பொருட்டு 17,000 முறை தோல்வியடைய தயாராக இருந்தார்.

தோல்வி என்பது வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்களில் ஒன்றே தவிர அதில் அவமானம் ஏதும் இல்லை. தோல்வி கற்றுத்தரும் பாடத்தை நீங்கள் ஆவலுடன் கற்க வேண்டும். தோல்வியைக் காட்டிலும் சிறந்த ஆசான் இருக்க முடியாது என்பதை உணருங்கள். நீங்கள் தோல்வி அடையும் போது அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு மீண்டும் முயற்சி செய்வீர்களேயானால் தோல்வியை நீங்கள் தோற்கடித்து விடுவீர்கள். வாழ்க்கையின் மிகமுக்கியமான வெற்றிப்பாடம் அதுதான். அதைப் படியுங்கள். படித்தாற்கேற்ப வாழ்ந்து காட்டுங்கள். வெற்றி கிடைப்பது உறுதி.

முக்கிய குறிப்பு: 1093 கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான தாமஸ் எடிசன் (டாமி) பள்ளிக்கூடத்தில் படித்தது ஆறே மாதம்தான்.


Here you can read General Knowledge, Interesting Facts, Tamil, English, Download Tamil books, quiz, play games, read story and much more fun...